states

img

பொய் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பழங்குடி மருத்துவ மாணவன் 13 ஆண்டுகளுக்கு பின் விடுவிப்பு

மத்திய பிரதேச மாநிலத்தில் பொய் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பழங்குடி மருத்துவ மாணவன் 13 ஆண்டுகளுக்கு பின் விடுவிக்கப்பட்டுள்ளார். 
மத்தியப் பிரதேச மாநிலம் பாலகாட் மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடி யின மருத்துவ மாணவர் சந்திரேஷ் மார்ஸ்கோல்.  இவர் பொய் வழக்கில் முதல் முறையாக ஆகஸ்ட் 25, 2008 இல் கைது செய்யப்பட்டு விசாரணை கைதியாக இருந்தார். பின்னர், குற்றவாளி என அறிவிக்கப்பட்டு சிறையில் இருந்துள்ளார். 2009 ஆம் ஆண்டு போபால் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்துப் மேல்முறையீடு செய்தார். ஆனால், அது பலனளிக்கவில்லை. இந்நிலையில் தற்போது போபால் மத்திய சிறையில் இருந்து  விடுவிக்கப்பட்டுள்ளார். மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் அவரை நிரபராதி என்று அவரது ஆயுள் தண்டனையை ரத்து செய்துள்ளது. 
இதுகுறித்து மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் ஜபல்பூர் அமர்வு கூறும்போது முன்முடிவோடு காவல்துறையினர் இந்த வழக்கை  விசாரித்துள்ளனர். 2008 ஆம் ஆண்டு எம்பிபிஎஸ் நான்காம் ஆண்டு மாணவரை பொய்யாகக் குற்றம் சாட்ட வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் காவல்துறையினர் இந்த வழக்கை விசாரித்துள்ளனர் என்று சுட்டிக்காட்டி உள்ளது. இதையடுத்து 90 நாட்களுக்குள் மார்ஸ்கோலுக்கு ரூ.42 லட்சம் இழப்பீடு வழங்குமாறு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இல்லையெனில் இழப்பீடு  செலுத்தும் வரை ஆண்டுக்கு ஒன்பது சதவீத வட்டி விதிக்கப்படும். ஆகஸ்ட் 25, 2008 இல் அவர் முறையாகக் கைது செய்யப்பட்டு விசாரணை கைதியாக இருந்தார். பின்னர், குற்றவாளி என அறிவிக்கப்பட்டு சிறையில் இருந்துள்ளார். “அவர் தனது வாழ்க்கையின் 13 ஆண்டுகளை இழந்துள்ளார். கைது செய்யப்பட்டபோது அவருக்கு 23 வயது. இன்று அவருக்கு 36 வயது. எந்த பண இழப்பீடும் இழந்த காலத்தை நிரப்ப முடியாது. முன்முடிவுடன் கூடிய விசாரணையால் உண்மையைப் பலிபீடத்தில் வைத்துக் கொன்றுள்ளனர். அதனால், அவரும் பலியாகியுள்ளார்,” என்று நீதிபதிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
ஒடுக்கப்பட்ட சமூகங்கள் எதிர்கொள்ளும் அவமரியாதை, பாகுபாடு, ஒடுக்குமுறை ஆகியவை  நாம் எதிர்கொள்ள மறுக்கும் உண்மை என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
காவல்துறை மற்றும் வழக்குரைஞர்களையும் உயர் நீதிமன்றம்  கடுமையாக விமர்சித்துள்ளது. “காவல்துறையின் விசாரணை முற்றிலும் பாரபட்சமாக இருந்துள்ளது. எல்லா தரப்பினரையும் உள்ளடக்கி குற்றத்தை விசாரிக்கவில்லை. காவல்துறையின் நடத்தையைப் பார்க்கும்போது குற்றம் செய்யாத அவரை தண்டனை  பெற வைக்கும் நோக்கத்துடன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது தெரியவருகிறது” என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது